Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, April 30, 2004

உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை.


1. விவாதம் வேண்டாம்.

2. அப்படி விவாதம் செய்தாலும் அதில் ஜயிக்க வேண்டாம்.

3. அப்படி விவாதத்தில் ஜயித்தாலும், ஜயித்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.


எனக்கு மிக மிகப் பிடித்த கதாசிரியர் விதித்த கோட்பாடுகள் இவை. (அவருக்கு ஏகப்பட்ட அனுபவம். தான் கற்ற பாடம் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று கட்டுரையாக எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டார்.).

யாரிடமாவது விவாதம் செய்து அவர்களை மண்ணில் போட்டு புரட்டு புரட்டென்று புரட்டாவிட்டால், இராத்திரி தூக்கம் வராமல் திண்டாடும் நண்பர்கள் சிலர் எனக்கு உண்டு. அவர்களுடன் அதிகம் பேசாமல் இருந்துவிடுவது என் வழக்கம். விவாதம் செய்யத் தெரியாமல் இல்லை; விவாதம் முற்றினால், இரண்டு பக்கமும் மனவருத்தம் மட்டும்தான் மிஞ்சும் என்பதால். ஒரு கட்டத்தில் 'சரியா, தவறா'? 'என்பதெல்லாம் மறந்து போய், 'நான் சொல்வதை நீ ஒப்புக்கொள்,' என்று இரு அணியுமே நினைப்பதால். நட்பையே பலிகொடுக்கும் நிலை வந்துவிடுவதால். The heat of the battle. எதிராளி நமது நண்பர் என்பது மறந்து போய்விடும். [தப்பித் தவறி நாம் வெற்றியடைந்துவிட்டால், நாள் கணக்காக கறுவிக் கொண்டு அலைவார்கள். மட்டம் தட்டும் சந்தர்ப்பம் அமையும் வரை விட மாட்டார்கள். இதைப் பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் கூடும். தேவையா?]. ஈகோ பிரச்சனை தலைதூக்கும். இந்த நிலைமை வரும்போதெல்லாம் நான் ஒதுங்கிவிடுவேன். நாளாவட்டத்தில் 'விவாதத்தில் இறங்குவதேயில்லை,' என்று முடிவெடுத்துவிட்டேன்.

ஒரே ஒரு முறை இந்த விதிக்கு விலக்கு அளிக்கலாம் என்று ஒரு நண்பரும் நானும் முடிவு செய்தோம். அது 'கடவுள்' சமாச்சாரம். நான் 'கடவுள் உண்டு' கட்சி. அவர் 'இல்லை' கட்சி. தொடங்கும்பொதே, 'நான் காரசாரமாகப் பேசுவேன். தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தோற்றுப் போவதற்குத் தயாராக இரு,' என்று ஏகப்பட்ட வார்னிங் கொடுத்துவிட்டுத்தான் ஆரம்பித்தார். "கடவுள் என்று ஒருவர் கிடையவே கிடையாது. தன் ஆழ் மனத்தின் பயங்களை மறைத்துக்கொள்வதற்காகவும், இயற்கையின் சீற்றங்களுக்குக் காரணம் காட்டவும், மனிதன் உருவாக்கிய விஷயம் அது" என்று Voltaire முதலான அறிஞர்களையெல்லாம் மேற்கோள் காட்டி ஆரம்பித்தார் நண்பர். என் வாதத்திற்கு நான் எந்த அறிஞரையும் துணைக்கு அழைக்கவில்லை. என் சொந்த அனுபவங்களை வைத்துக்கொண்டே வாதாடினேன். 'நாம் விவாதிக்கும் விஷயத்திற்கு ஏன் மற்றவர்களையெல்லாம் இழுக்க வேண்டும்?' என்பது என் எண்ணம்.

இந்தக் கடவுள் விவாதத்தில் எல்லோரும் வழக்கமாகப் பயன்படுத்தும் அஸ்திரத்தை நண்பரும் பயன்படுத்தினார். "கடவுள் என்று ஒருவர் இருந்தால், உலகத்தில் ஏன் இத்தனை கஷ்டம்? கடவுளுக்குக் கண் இல்லையா?" etc. etc.

"கஷ்டம் எதுவும் கடவுள் ஏற்படுத்தவில்லை. மனிதனே அவற்றை உருவாக்கிக்கொண்டான்..." என்ற ரீதியில் நான் பத்தி பத்தியாக வாதாடினேன்.

அவர்: கடவுள் என் பாரபட்சம் காட்டுகிறார்? குற்றமே செய்யாதவருக்கு தண்டனையும், குற்றம் செய்தவர்கள் சந்தோஷமாக வாழ்வதும் எப்படி நடக்கின்றன? இது எவ்வளவு பெரிய அநீதி?

"பிறந்ததிலிருந்து குற்றமே செய்யாதவர் என்று யாராவது உண்டா? அப்படி அவர் மனத்தூய்மையுடன் வாழ்ந்து, அப்படியும் தண்டனை அனுபவிக்கிறார் என்றால், காரணம் இல்லாமல் இல்லை. இங்கேதான் karma theory ஆரம்பிக்கிறது..." என்று பதில் மடல் எழுதினேன். Naturally. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை.

மனக்கஷ்டத்தை அனுபவிக்காதவர்கள் - கடவுள் தத்துவத்தைப் புரிந்துக்கொள்ள முடியாது. அதையும் மீறி அவர்கள் கடவுளைக் குறை கூறினால், அவர்களின் அடிப்படைப் புரிதலில் ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் அதலபாதாளத்தின் வரை செல்பவர்கள் - அதிலிருந்து மீட்கப்படுபவர்கள் - அவர்கள் மட்டும்தான் கடவுளின் இருப்பை முற்றுமாகப் புரிந்துகொள்ள முடியும். It's a question of faith. கோயிலில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைப்பவளும் அல்ல நான். கடவுளின் இருப்பை ஒப்புக்கொள்ளாதவர்கள் வைக்கும் அத்தனை வாதத்திற்கும் பதில் இருக்கிறது. எதிராளி அதைப் புரிந்துகொண்டு பேசினால். 'கண்ணால் பார்க்க முடியாத எதையும் ஒப்புக்கொள்ள முடியாது' என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதற்கு விடையை நம் மனம் அல்லவா சொல்ல முடியும்?

விவாதம் முற்றி, நாட்கணக்கைத் தாண்டி வாரக்கணக்கை எட்டியதும், 'இது முடியக்கூடிய விஷயமில்லை,' என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், இந்த விவாதம் எங்களது நட்பை பாதித்துவிடும் என்ற பயமும் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், 'வேண்டாம் விவாதம்' என்று முற்றுப்புள்ளி வைத்தோம். We agreed to disagree.

இன்று வரையில் அவருடைய நம்பிக்கையின்மையை நான் கிண்டலடிப்பதும், அவர் என்னை 'பக்தையே' என்று நக்கலடிப்பதும் தொடர்கிறது. ஆனால், இதனால் எங்கள் நட்பு பாதிக்கப்படாமல் இருந்து வருவதில் ஒரு நிம்மதியும் இருக்கிறது. கடவுளின் இருப்பை நிர்ணயிப்பதை விட, நட்பு பெரிதாகப் பட்டது/படுகிறது.

ஆனால், இது முற்றுப் பெறாத விவாதம். மீண்டும் பொறி பறக்க அதிகக் காலம் ஆகாது. நண்பரும் காத்துக்கொண்டிருக்கிறார் என்று உள்மனம் சொல்கிறது. :-)

நிற்க. விவாதம் வேண்டாம் என்ற தத்துவத்தில் கடவுளுக்கும் நம்பிக்கை இருக்கும் போலும். இது சம்பந்தப்பட்ட மடல்கள் என் கணினியில் ஒரு ·போல்டர் நிறைய இருந்தன. வெகுநாள் வரை அந்த மடல்களையெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தேன். ப்ச். ஓர் அற்பக் கணினிக் கிருமியின் சீற்றத்தில் அவையும் என் மடல்களும் சேர்ந்து அழிந்துவிட்டன. கடவுள் பாரபட்சமற்றவர் என்று நிரூபிக்க இது போதாது?

தேவையில்லாத குறிப்பு: சில பேருக்குக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வேலை.

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home