Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, April 19, 2004

பாலமும் பிறவும்...

பாலங்கள்.

சிவசங்கரியின் நாவல்களிலேயே என்னை அதிகம் கவர்ந்தது அவரது 'பாலங்கள்' தான் [இந்த நாவல், 'கோவை கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை பரிசு (ரூ.10,000) பெற்றது.]. பதினான்கு வயதில், தொடர்கதை வடிவத்தில் படித்தேன். அப்போதே மனதில் 'பச்' சென்று ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் நூல் வடிவில் அதைத் தேடியலைந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் பிடித்தேன். அப்போது முதல், ஆர்வம் தோன்றும் போதெல்லாம் எடுத்துப் புரட்டுவது வழக்கம்.

'பாலங்கள்' நாவலின் கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானது (அப்போது). 1907 - 1931, 1940-1964, 1965-1980 என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களைப் பதிவு செய்யும் நாவல். பெரும்பாலும் அந்தண சமூகத்தின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த குடும்பங்கள், அப்பொழுதைய சமூகம், பழக்க வழக்கங்கள், திருமணங்கள், வாழ்க்கை முறை...இப்படிச் செல்கிறது கதை. 'மூன்று தலைமுறைகளை ஒப்பீடு செய்க' என்ற கேள்விக்கு பதில் மாதிரி இருக்கிறது.

1907-1931:

இந்தக் காலகட்டம் எனக்கு மிகப் பிடித்தமானது. ஏழிலிருந்து பத்து வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் செய்வது, வருடம் முழுவதும் வரும் ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டுப் பெண்கள் மாய்ந்து மாய்ந்து வேலை செய்வது, விவசாயம், வெளி வேலைகள் என்று ஆண்கள் சாம்ராஜ்யம் நடப்பது, இப்படி எத்தனையோ. இத்தனை வருடங்கள் கடந்து, எழுத்தின் மூலம் அந்த நாட்களை எட்டிப் பார்த்தால், சுவாரசியமாக இருக்கிறது. [அப்பொழுது வாழ்ந்தவர்களைக் கேட்டுப் பார்த்தால், எக்கச்சக்கமாக அலுத்துக்கொள்வார்கள்.]. சவுகரியங்கள் எதுவும் அற்று, பொழுது போக்கு என்றால் அடுத்த வீட்டுக்காரர்களுடன் பேசுவதும், கோவிலுக்கும் உறவினர் வீட்டுக்குப் போவது மட்டுமான வாழ்க்கையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. [புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்பொழுதெல்லாம் புத்தகம் படிக்கும் வழக்கமே பெண்களுக்கு இல்லை.].

மாறி மாறி தீபாவளி, பொங்கல், புது வருடம், அந்த நோன்பு, இந்த நோன்பு என்று இடுப்பொடிய வேலை செய்திருக்கிறார்கள். பண்டிகை என்பதே எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயம் என்பதற்குப் பதிலாக, 'மாங்கு மாங்'கென்று வேலை செய்யும் சமயம் என்று அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் இனிப்பு/கார சமாச்சாரங்களின் பட்டியல் இது: சோமாசி, மனோப்பு, சாதா தேன்குழல், திரட்டுப்பால், மைசூர்பாகு, ஒக்காரை, காலை டிபனுக்கு இட்லி, அப்புறம் இருக்கவே இருக்கும் தீபாவளி லேகியம்...இன்னும் எத்தனையோ.

சமையலும் வீட்டு வேளையும் செய்தது போக ஒழிந்த நேரங்களில், கொஞ்சமே கொஞ்சம் என்ஜாய் செய்திருப்பார்கள் போல. கதாநாயகியின் திருமணத்தின் போது, கூடியிருப்பவர்கள் பாடும் நையாண்டிப் பாடல்களின் ஒரு சாம்பிள்:

'சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்,
வெகு சங்கோஜி-எங்கள் சம்பந்தி-
பானை போதி வயிறும்
பட்டாணி மூக்கும்
எலிவால் பின்னலும்-எங்கள் சம்பந்தி...'



இதற்கு பதில் பாடல் எதிர் சாரியிலிருந்து கிளம்பும்.

'என்னால் முடியாது-இந்த
அருமை வேட்டகம் போய்
அவமானப்பட்டுவர
என்னால் முடியாது-
முதல் நாள் வடை பாயசம்,
இரண்டாம் நாள் வத்தக் குழம்பு,
மூணாம் நாள் பழைய சாதம்,
நாலாம் நாள் வடிச்ச கஞ்சி
என்னால் முடியாது-
முதல் நாள் கட்டில் மெத்தை,
இரண்டாம் நாள் பட்டுப் பாய்,
மூணாம் நாள் வாசத் திண்ணை,
நாலாம் நாள் மாட்டுக்கொட்டில்,
என்னால் முடியாது...'



இப்படி இட்டுக் கட்டி பாட்டிக்கொண்டே போய்விடுவார்கள். இதற்கே ஒரு தனி சாமர்த்தியம் வேண்டும். [(எங்கள் உறவினர் இந்த மாதிரி பாட்டு கட்டுவதில் மன்னர். கல்யாணங்களில் நலங்கு சமயத்தில் அவர் எதிர்ப்பட்டால் எல்லோரும் நடுங்குவது வழக்கம். எப்போது யாரை 'பாட்டுப் பாடுகிறேன் பேர்வழி' என்று வம்புக்கிழுக்கப்போகிறார் என்பதினால்:-)].

1940-1965

இந்தக் காலகட்டத்தில் பல மாற்றங்கள் நுழைந்துவிடுகின்றன. சினிமா வந்துவிட்டது (தியாகராஜ பாகவதர்...). பெண்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவது சாதாரணமாகிவிட்டது. இருந்தாலும், பழைய பழக்க வழக்கங்கள் மொத்தமாகத் தேய்ந்து மறைந்துவிடவில்லை.

1965-1980

நம் மாடர்ன் உலகம். வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா? :-)

இந்தத் தொடரைப் படித்த போது, புத்தகத்தின் இறுதியில் வாசகர் கடிதத்தையும் சேர்த்து 'பைண்ட்' செய்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு வாசகர், '1907 படித்த போது, உருளைக்கிழங்கு ரோஸ்ட்டும், வெங்காய சாம்பாரும் சாப்பிட்டது போல் இருந்தது. 1940இல் புளியோதரை, கெட்டித் தோசை, 1980 ப்ரெட் டோஸ்ட்டும் வெண்ணெய் ஜாமும் சாப்பிட்ட உணர்வு வந்தது' என்று ரசனையுடன் எழுதியிருந்தார்:-)

***********************

ஜெ.மோகனின் 'காடன்விளி' படித்தேன். (பெருமூச்சு.)

'The woman in the dunes' புத்தகத்தை விமர்சனம் செய்திருக்கிறார். இருத்தலியல், இருண்மை என்று கொஞ்சம் 'கடமுட'வென்று இருந்தாலும், இது பரவாயில்லை.:-)


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home