Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, April 24, 2004

சில்மிஷியே...!

ஆசைப்படுவது எல்லாவற்றையும் அடையமுடியாததில் ஒரு வித சுகம் இருக்கிறது. கேட்கும் எல்லா விஷயமும் உடனுக்குடன் கிடைத்துவிட்டால், அந்த அநுபவமும் பொருளும் மதிப்பிழந்து போய்விடுகின்றன. ஒரு பொருள் வேண்டுமென்று நினைத்து, அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட்டால், அதற்கான பலன் வந்து சேரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை.

நான் புத்தகம் வாங்குவதும் அப்படித்தான். எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் புத்தகக் கடைக்குச் செல்வேன். வாங்கும் உத்தேசமே இல்லாமல், புத்தகம் புத்தகமாகப் புரட்டுவேன். அட்டைகளைப் பிரித்துப் பார்ப்பேன்; சில சமயம், புத்தகம் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்போல் தோன்றினால், தரையில் மண்டியிட்டு இரண்டு மூன்று அத்தியாயமாவது படித்துவிட்டுத்தான் எழுந்திருப்பேன்.

என்னைப்போல் அந்தக் கடையில் புத்தகம் வாங்க வரும் மற்றவர்கள் பெரும்பாலும் ஹை-டெக் ஆட்கள். ஒயிலாக நடந்து வருவார்கள். கண்ணில் பட்டதைப் பிரிப்பார்கள் (அநேகமாக அப்போது புகழ்க் கொடி நாட்டியிருக்கும் பெஸ்ட்-ஸெல்லராக இருக்கும்); அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நான் இரண்டு புத்தகம் புரட்டும் நேரத்தில் போயே போய்விடுவார்கள்.

எவ்வளவு பெரிய வேஸ்ட்.

புத்தகம் வாங்குவதென்றால் சாதாரணமா? அது ஒரு அற்புத அனுபவம். முதலில் கடை முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, அன்றைய புதுவரவுகளை நோட்டம்விட்டு விட்டு, பிடித்த எழுத்தாளர்கள் வரிசையை நோண்டிவிட்டு, இரண்டு மணிநேரமாவது செலவழித்து, மாதக்கணக்காக 'வாங்க வேண்டும்' என்று அலைபாய்ந்துகொண்டிருக்கும் புத்தகம் ஏதாவது திடீரென்று கண்ணில் பட்டு, அதைப் பாய்ந்து பிடுங்கி எடுத்து, கடவுளை எதிர்பாராமல் கண்ட பக்தை மாதிரி முகத்தைச் சுற்றி ஒளிவட்டத்துடன் வெளியேறினால்தான்... புத்தகம் வாங்கும் அனுபவம் முழுமை அடைகிறது. எனக்கு.

சொல்லிக்கொண்டே போகலாம் - ஆனால் நான் எழுத நினைத்தது வேறு.

சமீபத்தில் இப்படிக் கடையில் சுற்றிக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட புத்தகம்தான் 'சில்மிஷியே...'. கவிஞர் பா.விஜய்யின் கவிதைத் தொகுப்பு. தலைப்பைப் பார்த்தவுடன் அது என்ன மாதிரியான தொகுப்பாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. 'வழ வழ'வென்று அட்டை போட்டு, கலர் கலராக ஓவியங்கள் போட்டு கலங்கடித்திருக்கிறார்கள். பழங்கால ஓவியங்களைப் போட்டு நிரப்ப முடியாத இடங்களில் ஓவியர் காதல் கவிதைக்கேற்ற ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

'கவிதை எப்படி?' என்று பார்க்கப் புரட்டினேன். 'என் கண்ணின் மணியே...உன் உடல் முழுவதும் காதல் நரம்பு...என் உயிர் உன் கண்ணில்...நன் உன் பெயர் சொல்வேன்...நீ உருகிப்போவாய்...' etc etc.

ஏமாற்றமாக இருந்தது. சிரிப்பாகவும் இருந்ததது. ஒரு பக்கம், நல்ல எழுத்தை வெளிக்கொணர ஒவ்வொருத்தர் மலையைக் கெல்லி எலி பிடிக்க வேண்டியிருக்க, இங்கே 'நான் மரம், நீ கொடி' என்று கவிதைகள் எக்கச்சக்க விலையில் அமர்க்களப்படுகின்றன.

ஓ'ஹென்றி ஒரு சிறுகதையில், ' மனித வாழ்க்கையின் அத்தனை அபத்தங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை ஆசைகளையும் லட்சியங்களையும் களைந்துவிட்டுப் பார்த்தால், பசி ஒன்றுதான் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கும்', என்று சொல்லியிருப்பார்.

இதே விதியை கவிதைக்கும் பயன்படுத்தலாமோ என்று தோன்றுகிறது. 'சில்மிஷியே'வின் வெளிப்பூச்சையும் கலர் ஓவியங்களையும் களைந்துவிட்டு சாரத்தைப் பார்த்தால்...ஒன்றுமில்லை.

நான் புத்தகத்தைக் கீழே வைத்த மறுநிமிடம் ஒரு சல்வார்ப் பெண் அதை ஆவலாகத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். ரசனை பலவிதம். குற்றம் கூறும் உரிமை யாருக்கு இருக்கிறது?

|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home