Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, April 26, 2004

ஆட்டோகிரா·ப்

நேற்று நண்பர்களுடன் விருந்து.

யாரைக் கேட்டாலும் (என் அனுபவத்தில்), கல்லூரி நாட்களைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். கல்லூரி நினைவுகளில் இன்ஸ்டண்டாக உருகிப்போவார்கள். முதல் கவிதையிலிருந்து முதல் காதல் வரை எல்லாமே அங்குதான் தொடங்கியிருக்கும். நட்பு மிக முக்கிய இடம் வகிக்கும். அந்த வருடங்களின் எல்லா சம்பவங்களூம் வழக்கத்தை விட அதிக முக்கியத்துவம் அடையும்.

எனக்கு எல்லாமே தலைகீழ். கல்லூரியில் எனக்கு இது எதுவும் அமையவில்லை.(கவிதை எழுதும் நண்பி ஒருத்தியைத் தவிர. அவளும் இரத்தத்தில் கவிதை எழுதும் பழக்கமுடையவளாக இருந்தாள். டைரி டைரியாக, காய்ந்து போய் பிரவுன் நிறமாக மாறியிருந்த இரத்தத்தில் கவிதைகள். 'எங்கே, உன் நட்பை நிரூபித்துக் காட்டு' என்று விபரீதமாக ஏதாவது சொல்லாமல் இருக்க வேண்டுமே' என்று நான் பயந்த பயம் எனக்குத்தான் தெரியும்.)

என் கல்லூரி நட்பு வட்டம் விதித்த சில கட்டுப்பாடுகள்:

1. காதல் சமாச்சாரங்கள் - அவை சம்பந்தப்பட்ட கவிதைகள் கூடாது. ('அதெல்லாம் ரொம்பத் தப்புடா.') ஆனால் தலைவி(self-appointed) மட்டும் கவிதை எழுதுவார். அதுவும் நட்பு பற்றி மட்டும். தினம் இரண்டு.

2. தலைவியைத் தவிர வேறு யாரும், பிறந்தநாள் விசேஷங்களூக்கு அவர் விதித்த விலையை மீறி பரிசுப் பொருள் வாங்கித் தரக்கூடாது. ('வாழ்க்கைல பணம் முக்கியமில்லைடா...' - அவரும் அவருக்கு அணுக்கமானவர்களும் மட்டும் ஐந்நூறு ரூபாய் செலவு செய்வார்கள்.)

3. 'கட்'டடித்து சினிமா செல்வது பெரிய குற்றம். (தலைவிக்குத் தோன்றினால், அப்பொழுது மட்டும் செல்லலாம்.)

4. 'டா' மொழி இன்றியமையாதது. அதில்லாமல், சாதாரணமாகப் பேசுபவர்கள் முறைக்கப்படுவார்கள்.

5. அடிக்கடி மற்றவர்கள் முன்னிலையில் அழ வேண்டும். (இது எனக்கு சுத்தமாகக் கை வரவில்லை.)

இது காலேஜா, மத்திய சிறைச்சாலையா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த விதிகள் எனக்கு ரொம்பவும் 'டூ மச்'சாகத் தோன்றியதால், நான் ஒதுங்கிக்கொண்டேன். அபத்தமாகத் தோன்றியவை விதிகள் மட்டுமல்ல; அவற்றில் இருந்த மெல்லிய hypocrisyயும்தான். 'நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்; நீ செய்யக்கூடாது' என்ற லேசான ஆணவம். அதை அப்படியே சிரமேற்கொண்டு 'இதுதான் கல்லூரி வாழ்க்கை' என்று கடைபிடிக்கத் தயாராக இருந்த மீதி எட்டு நண்பிகள். ஒரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. (சிரிப்பு வந்தது:-) தூரத்திலிருந்து அவர்களது ஆர்ப்பாட்டங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன்.:-)

நிற்க. அந்த மயக்கம் தெளிந்து ஆளாளுக்கு இப்பொழுது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

கல்லூரி 'நட்பு' வட்டத்தின் வெறுமை புரிந்து விலக ஆரம்பித்த போது, அதைத் தீர்க்க ஆபத்பாந்தவர்களாக வந்தவர்கள் - பள்ளி நண்பர்கள். கல்லூரி வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் பிரிந்தவர்கள், கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டோம் (அதுவரை அப்படியோரு ஹோல்-சேல் சந்திப்பு அமையவில்லை.)அதன் பிறகு அவ்வப்போது சந்தித்துக்கொண்டோம்.

இல்லாத உணர்ச்சிகள் இருப்பதாக நாடகம் ஆடாமல், செயற்கையாகப் பேசாமல், 'எதுவானாலும் நாங்கள் இருக்கிறோம்' என்று காட்டிக்கொண்ட நண்பர்கள்/நண்பிகள். எத்தனை வருடம் கடந்தாலும், க்ளாஸ் ரூம் கலாட்டாக்களையும், ப்ரின்சியை மீறிக்கொண்டு ஸ்டிரைக் செய்ததையும் (?!) மறக்காத, ரசித்துச் சிரிக்கும் நண்பர்கள்.

ஹா. இப்படிப்பட்டவர்களுடன் ஒரு மதியப்பொழுதைக் கழிப்பது சுகம். நேற்றும் பழைய நினைவுகள் (வயசாச்சில்ல?) பகிர்ந்துகொண்டோம். அதில் இருவருக்கு அடுத்து வரும் மாதங்களில் திருமணம். அவர்கள் நாகரீகமாக 'ஜொள்ள', மற்றவர்கள் அவர்களை ஏற்றிவிட...யாருக்கும் வீட்டுக்குப் போகவே மனம் வரவில்லை. 'அடிக்கடி இந்த மாதிரி சந்திக்கணும்' என்று சத்தியம் செய்துகொண்டோம். (அதற்காக வாரம் மூன்று முறை கூட்டம் போட்டால், இந்த சந்தோஷம் இருக்குமா?)

எப்படியிருந்தால் என்ன? அந்த நாள் - இனிய நாள்.


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home