Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, May 14, 2004

தேர்தலில் 'இருவர்'

பெரும்பாலான பெண்கள் தேர்தல் சமாச்சாரமெல்லாம் எழுதுவதில்லை என்று பரவலாக உள்ள [(நான் கேள்விப்பட்ட) கருத்தை - இப்படி ஒரு disclaimerஐ எல்லா இடங்களிலும் கொடுத்து வைக்க வேண்டியிருக்கிறது)] நானும் உண்மையாக்கப்போகிறேன். தலைப்பில் மட்டும்தான் தேர்தல்.

நேற்று 'இருவர்' படம் பார்த்தேன். எலக்க்ஷன் ஸ்பெஷலாம். பொருத்தமாகப் படம் தேர்வு செய்த கில்லாடிகள்.

'இருவர்' வெளியான போது, 'படம் நல்லாவே இல்லை' என்ற விமர்சனத்தையெல்லாம் துச்சமாக மதித்து, பறந்தடித்துக்கொண்டு தியேட்டரில் போய்ப் பார்த்தவள் நான். பெருவாரியான கருத்துக் கணிப்போடு பல சமயம் என் கருத்து ஒத்துப்போனதில்லை. இந்த முறையும் அப்படித்தான் ஆயிற்று. அணு அணுவாக நான் ரசித்த படம் 'இருவர்'. வீட்டிற்கு வந்து படத்தை அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்த பிறகும் என் ஆர்வம் குறையவில்லை. அதற்குப் பிறகு, எப்போதெல்லாம் 'இருவர்' ஒளிபரப்பாகிறதோ (இது வரை 'விஜய்' மட்டும்தான் ஒளிபரப்பியிருக்கிறது, இல்லையா? இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? :-) அப்போதெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடுவேன். நேற்றும் விதிவிலக்கல்ல.

பத்தி பத்தியாக எழுத இன்று சலிப்பாக இருக்கிறது (எனக்கு.) என் வாசகப் பெருமக்களே...!என் மீது அளவிலாப் பிரியமும், சொல்லவொண்ணா அன்பும் கொண்டு, இன்றுவரை எனக்கு எள்ளளவும் குறையாத ஆதரவு காட்டி வரும் உங்களூக்கு என் எழுத்தின் மீது அலுப்பே வராது என்பது நான் முன்னமே அறிந்த உண்மை. (Hear, hear...!). இனி...


1. மோகன்லாலும், பிரகாஷ்ராஜும் 'பின்னு' 'பின்'னென்று பின்னியெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் திரையில் பார்த்தால், நடிகர்கள் என்று சொல்லத் தோன்றவில்லை. கதாபாத்திரமாக உருமாறி, நடிகன் ஆனந்தனாகவும், அரசியல்வாதி தமிழ்ச் செல்வனாகவும் கலந்து போயிருக்கிறார்கள். புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை. புதிதாகக் கண்டுபிடித்துத் தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டும்.

2. படம் சுற்றிச் சுற்றி திருமலை நாயக்கர் மஹாலிலேயே நடக்கிறது. ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் சந்திக்கும் இடங்கள், அவ்வப்போது நடக்கும் ஷ¥ட்டிங், கடைசியில் நடக்கும் விழா, படத்தின் முடிவில் தமிழ்ச் செல்வன் நண்பனின் மரணத்தை நினைத்து துக்கப்படும் காட்சி...எல்லாமே.

3. வேலுத்தம்பி ஐயாவின் கட்சியில் ஆனந்தன் சேர வரும் போது, முகம் இறுகிப் போகும் தமிழ்ச் செல்வன், 'சினிமாக்காரந்தானே?' என்று உடனேயே புன்னகையை வரவழைத்துக்கொள்ளூம் காட்சி. கட்சியில் சேர்ந்து ஐயாவின் வரவேற்பையும் பெற்ற பிறகு, தமிழ்ச்செல்வனைத் தழுவிக்கொள்ளும் ஆனந்தன், 'தமிழ்செல்வனுக்கு நான் கட்சியில் சேர்ந்தது பிடிக்கலை.' என்று புன்னகையுடனும் (வருத்தத்துடனும்) சொல்வது. அவர்களின் நட்பில் விரிசல் விழுந்து விட்டதற்கறிகுறியாகப் பின்னால் ஒலிக்கும் போர் முரசைப் போன்ற சப்தம்...

4. மலர்க்கிரீடம் அணிந்துகொண்டு கூட்டத்தில் வீராவேசமாகப் பேசும் தமிழ்ச்செல்வன், ஆரவாரத்துடன் வந்து இறங்கும் ஆனந்தனையும் கல்பனாவையும், அவர்கள் வந்தவுடன் அருகே தலைதெறிக்க ஓடும் கூட்டத்தையும் பார்த்து சுரத்திழந்து போவது...

5. ஐஸ். ஐஸ். ஐஸ். (யாரைப் பிரதிபலிக்கும் விதமாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதோ, அவரைப் போல் இன்னும் கொஞ்சம் 'கொழுக்' 'மொழுக்' கென்று இருந்திருக்கலாம்.). புஷ்பாவாக அவர் வரும் காட்சிகள்.

6. முதன் முதலில் கல்பனாவைக் (ஐஸ்) கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கும்படி மனைவி பரிந்துரைக்க, 'வேணாம். அப்புறம் வருத்தப்படுவே,' என்று சொல்லும் ஆனந்தன்...

7. தமிழ்ச் செல்வனும், அவரது இரண்டாவது மனைவியாகப் போகிறவரும் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சி. திருமணம் ஆன பிறகு, அவர் அவரது மகள் 'மணி மேகலைக்கு' நிதானமாகத் தமிழ் கற்றுத் தரும் இடம்.

8. வேலுத்தம்பி ஐயா இயற்கை எய்தியவுடன் நடக்கும் இரங்கல் கூட்டத்தில், ஆனந்தன், 'எனக்குக் கவிதை பேசத் தெரியாது. கண்ணிர் விடத் தெரியாது...' என்று ஆரம்பித்து, கட்சி நிதிக் கணக்கு வரை செல்லும் காட்சி. சபை முன்னால் எதையும் மறுக்க முடியாமல் உறைந்து போன முகத்துடன் அவர் பின்னால் நிற்கும் தமிழ்ச் செல்வன்.

9. கட்சியை விட்டு நீக்கியவுடன், கூடியிருக்கும் பத்திரிகை நிருபர்களுக்குப் பாயசம் கொடுத்து, மைனஸ்ஸைப் ப்ளஸ்ஸாக்கும் ஆனந்தனின் மெகா திறமை. [வந்திருக்கும் நிருபர்கள் எல்லோரும் பாக்ஸ் கேமரா வைத்திருக்கிறார்கள்.:-]

10. ஆனந்தன் முதல்வரான பிறகு, அவரும் தமிழ்ச்செல்வனும் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினராகச் சந்தித்துக்கொள்ளூம் திருமண விழா. 'தேர்தல் வருது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரிச்சிட்டு இருக்கக்கூடாது' - ஆனந்தன்.

11. ஆனந்தன் இறந்தவுடன், அவரைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன், பார்க்காமலேயே தளர்ந்த நடையுடன் திரும்புவது. இளவயது நினைவுகளையும் இழந்த நட்பையும் நினைத்து 'எல்லாவற்றிலும் என்னை முந்த வேண்டும் என்று நினைத்த நீ, மரணத்திலும் என்னை முந்திவிட்டாயா?' என்று மறுகுவது.

12.உண்மையிலேயே பிணமாகிவிட்டாரோ என்று நினைக்கும்படியான மோகன்லாலின் அசாத்திய நடிப்பு (வாயில் ஈ மொய்க்கிறது.).

13. பாடல்களும் பின்னணி இசையும் அற்புதம். அதிலும் 'ஆயிரத்தில் நான் ஒருவன்...'

14. படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அடியில் 'திமுக இங்கு ஜெயித்தது, அங்கு ஜெயித்தது' என்று scroll ஆகிக் கொண்டிருந்த செய்திகள். 'அதிமுகவுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்' என்று கறுவிக்கொண்ட எதிரணியினர்.

Who had the last laugh? ஆனந்தனா? தமிழ்ச்செல்வனா?



|

1 Comments:

  • At 6:27 PM, Blogger Unknown said…

    Iruvar... Tamizh naatin arasiyal aani vergalin adi thedum oru muyarchi...

    Ithuvarai iruvarai innoruvar ippadi rasithu irrupaar ena naan ninaithathu illai...

    http://sethukal.blogspot.com

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home