Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, September 02, 2006

சென்னையும் படச்சுருளும் - 2

Madras in Moviesஇன் இரண்டாம் பகுதி.

படச்சுருள் - 2 SmileyCentral.com

"I am going to talk about the history of mankind," என்று ஆரம்பித்தார் ராண்டார் கய். கடைசி நிமிடத்தில் பேச வேண்டிய உரையை மாற்றிவிட்டர்களா என்று யோசித்துக்கொண்டிருந்த போது, "இது சினிமாவின் எழுபத்தைந்தாவது வருடம்," என்று சொல்லி நிம்மதியேற்படுத்தினார்.

பெண்ணாத்தூர் சுப்ரமணியம் ஹை ஸ்கூலில் மாலை மணி ஏழு. ஸ்கூலின் கடைசிப் பகுதியில் இருந்த தக்ஷினாமூர்த்தி ஹால். வெளியே சடசடவென்று மழை வந்து விட்டது. அதன் சப்தத்துடன் போட்டியிட்டு எழுந்தது ராண்டார் கய்யின் கரகரப்பான குரல். "க்ளிப்பெல்லாம் சரியா இருக்கா?" என்று விசாரித்துக்கொண்டார். "அன்றைய சினிமாவில் மதராஸ்பட்டினத்தைப் பார்க்கலாமா?" என்றார். உற்சாகமாக எல்லோரும் தலையசைக்க, தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டப்பட்டன.

Randor Guy

1931இல், இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் வெளிவந்தது. 'ஆலம் ஆரா.' படம் எடுத்தவர் ஆர்தேஷிர் இரானி. சப்தமில்லாத சினிமாவின் காலம் முடிந்துபோய்விட்டது என்பதை நன்கு உணர்ந்தவர்.

அதே படத்தை தமிழிலும் எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு, தமிழில் அந்தப் படம் 'டப்' ஆகுமா என்று சந்தேகம் வந்தது. படத்தில் தமிழ் வசனங்கள் ஒலிக்காவிட்டால் எப்படி? அப்புறம் தெலுங்கு வசங்கள் சேர்த்தார். மீண்டும் சந்தேகம் தலைதூக்கியது. அதனால் இந்தி வசனங்கள் சிலதைச் சேர்த்தார் ('ஆலம் ஆரா' எடுத்ததால், ஹிந்தி கண்டிப்பாக ஒலிக்கும் என்ற நம்பிக்கை).

இதனால் அறியப்படுவது என்னவென்றால், நாம் முதல் தமிழ் 'டாக்கீ' - ஒரு trilingual படம் என்பதே. சுதேசமித்திரனில் விளம்பரம் கொடுத்த போது, "தமிழ்/தெலுங்கு பேசும் படம்" என்று கொடுத்தார்கள்.

காளிதாஸ் படத்தில் நடித்த கதாநாயகி, டி. பி ராஜலக்ஷ்மி. மிகச் சிறிய வயதில் திருமணம் ஆகி, கணவர் பிரிந்து போய்விட, அந்த துக்கத்தில் அப்பாவும் இறந்துவிட்டார். தன்னந்தனியாக நிறுத்தப்பட்ட தாயும் மகளும், நாடகத்தில் சேர்ந்துவிடும் முடிவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்கள். ராஜலக்ஷ்மியின் தாய் தீர்க்கதரிசி. மகளின் ஆடல் பாடல் திறமைகளுக்கு இங்கு நிச்சயம் இடமுண்டு என்பதை நம்பினார். அந்தக் காலத்தில் இந்த முடிவை எடுக்க, பயங்கர தைரியம் இருந்திருக்க வேண்டும்.

திருச்சியில் ஜகன்னாத ஐயரை (பட இயக்குனர்)சந்தித்திருக்கிறார்கள். வந்திருந்த சின்னப் பெண்ணை நடித்துக்காட்டச் சொன்னாராம் அவர். அப்போது அருகிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் ஒருவர். தமிழ் நாடகங்களின் தந்தை என்று புகழப்படும் சங்கரதாஸ் சுவாமிகள். "இந்தப் பெண் மிகப்பெரிய நடிகையாக வருவாள்," என்று ஆருடம் சொன்னவரும் அவர்தான்.

இன்று நம் காதாநயகர்களும் நாயகிகளும் என்னென்னவோ டைட்டில்களுடன் வலம் வருகிறார்களே? அன்று டி.பி.ராஜலக்ஷ்மியின் டைட்டில், 'சினிமா ராணி.' அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அன்றைய தேதியில் அவரது சம்பளம், மாதம் முப்பது ரூபாய். செய்தியைக் கேட்டதும் அவரது தாயால் விஷயத்தை நம்பவே முடியவில்லை. "நெஜமாவா? மாசாமாசம் முப்பது ரூவா தருவீங்களா?" என்று அதிசயத்துடன் கேட்டாராம். அப்போது ரூபாய் ஒன்றுக்கு பதினாறு படி அரிசி வாங்கலாம். பவுன் விலை பதின்மூன்று ரூபாய்.

Windfall!

பின்னாளில் வாசு தெரிவில், 'ராஜா நிவாஸ்' என்று பெரிய பங்களா கட்டிக்கொண்டு அதில் வாழ்ந்தார்கள். சினிமாவின் செழிப்பு அப்பேர்ப்பட்டது.

அப்போதெல்லாம் புராணக் கதைகளையும், ராஜா ராணிக் கதைகளையும்தான் எக்கச்சக்கம். 'As is, where is,' முறையில் நாடக வசனங்களை அப்படியே திரைக்கு மாற்றினார்கள். 1933இல் அப்படி வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'வள்ளி திருமணம்.' இதிலும் நம் 'சினிமா ராணி'தான் ஹீரோயின். Elephantstone Cinemaவின் ரிலீஸ். இயக்குனர் சாமிக்கண்ணு வின்செண்ட். படத்தைத் திரையிட்டபொது ஒரு ரீல் எங்கோ காணாமல் போய்விட, அது இல்லாமலேயே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அது கிடைத்துவிட, கல்கத்தாவிலிருந்து (?!) அதை வரவழைத்து, "காணாமல் போன ரீலுடன் சேர்த்து மீண்டும் திரையிடப்படுகிறது" என்று ரி-ரிலீஸ் செய்தார்கள் ... படம் படு பயங்கர ஹிட்!

இதைதான் ராசி என்கிறார்கள் போலும்.

அப்புறம் வந்ததுதான் தியாகராஜா பாகவதரின் பொற்காலம். [ ஃபிலடெல்ஃபியாவில் இன்று தி.பாவின் ரசிகர் மன்றம் முழுவீச்சில் செயல்படுகிறதாம்.]'பவளக்கொடி'யில் ஆரம்பித்து, அவருக்கென்று பித்துப்பிடித்து அலையும் ஒரு fan followingஐ உருவாக்கினார். [ஜெயகாந்தன் எங்கோ எழுதிப் படித்திருக்கிறேன்: பொன் கலர் ஜிப்பாவை அவர் அணிந்துகொண்டால், ஜிப்பா எது, கை எது என்று தெரியாத அளவு, பொன் நிறத்தில் இருப்பாராம். அவர் ட்ரெயினில் எங்காவது செல்லும்போது, ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கூட்டம் அலைமோதுமாம். ஸ்டேஷனில் எங்காவது நின்றால், 'கொஞ்சம் வெளிய வந்து நில்லுங்களேன்,' என்று டிடிஆர் வந்து ரிக்வெஸ்ட் செய்துகொள்வாராம்.]

Srinivas Cinetoneஐ ஆரம்பித்தவர் ஏ நாராயணன். அவரது மனைவி மீனாக்ஷியை அன்றைய மடிசார்மாமி என்று சொல்லலாம். கர்நாடக சங்கீதம் நன்கு தெரிந்த அவர்தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர். ['ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதா?' என்று பலர் முறைத்துக்கொண்டு வெளியேறியதாகக் கேள்வி.]

Audience


அன்றைய மதராஸ் பட்டினத்தில், அவுட்டோர் ஷூட்டிங் எடுப்பதற்கென்று பரவலாக அறியப்பட்ட இடம் அடையாறு. மரங்கள் சூழ்ந்த பகுதி. வெய்யில் வந்தால்தான் ஷூட்டிங். ஏனென்றால் லைட்டிங்கிற்கெல்லாம் வசதியில்லை. மேகம் வரும்போதெல்லாம் உட்கார இடம் தேடி, சாப்பாட்டுக் கடையை முடித்து, இப்படியே சமாளித்திருக்கிறார்கள். சாப்பிட்ட பருக்கையையெல்லாம் காடு போல் வலர்ந்திருந்த பகுதியில் எல்லோரும் வீசியெறிய, அதைக் கொத்தித்தின்ன காக்காக்கூட்டம் வந்துவிடும். 'கா, கா," என்று அவை கத்தி அமர்க்களப்படுத்துவது ஷூட்டிங்கை பாதிக்கவே, அவற்றை விரட்டுவதற்காகவே தனியாக ஒரு Anglo-Indianஐ ஏற்பாடு செய்தார்கள்: படம் வெளிவரும்போது, 'Crow-shooter Joe' என்று டைட்டிலில் தெரியுமாம். SmileyCentral.com


இதோடு ராண்டார் கைய்யின் பேச்சு முடிந்தது. அப்புறம் ஃபிலிம் கிளிப்புக்களை ஓடவிட்டு, அதனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தார். பழைய மதராஸைக் காட்டும் சில படங்களைப் பார்த்தோம். முக்கியமாக 'என் மனைவி' [இதைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருக்கிறேன்]- மதராஸ் தெருக்களெல்லாம் ஈயோட்டிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை நான் பார்த்திருக்கீறேன். [எனக்கு இதில் மிகப்பிடித்த வசனம்:

சாரங்கபாணி: நாங்க இப்போ ஊரை விட்டு ரொம்ப தொலவு குடிபோயுட்டோம்.

வந்தவர்; அப்படியா? மின்னே மைலாப்பூர்ல இருந்தேளே? இப்போ எங்கே?

சா (மிகுந்த சோகத்துடன்): கோடம்பாக்கம்.

வந்தவர்: அடப்பாவமே!

ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் வெகு தொலைவாமே
!]

படத்தில் ஆர் பத்மா என்றொரு நடிகை வருவார். கதைப்படி, பட்டிக்காட்டிலிருந்து வந்து, முதன்முறையாக மதராஸ் பட்டினத்தைப் பார்க்கும் வேலைக்காரப் பெண் அவர். வீட்டின் முற்றத்தில் அங்கும் இங்கும் 'தங்கு தங்'கென்று குதிப்பார். தமாஷாக இருக்கும். அவர் பாடும் பாட்டிலிருந்து:

"மானத்திலே போகுது பார் மாடில்லாத வண்டி!" (ஏரோ ப்ளேன்)

கடற்கரையில் கார்ப்பரேஷன் ரேடியோவில் அப்போதெல்லாம் (1930s) செம்மங்குடி, அரியக்குடி பாட்டுக்களையெல்லாம் ஒலிபரப்புவார்கள். அது பற்றியும் இந்தப் பாட்டில் வரும். பின்னாளில் கார்ப்பரேஷன் ரேடியோ 'ஆல் இந்தியா ரேடியோ'வாக மாறியது.

கிடக்கட்டும். ஆர் பத்மா வாங்கிய பட்டம் என்ன தெரியுமா? Sex symbol! [ஜாக்கெட்டில்லாமல் வந்ததனால்.]

அப்புறம் 'சபாபதி.' இதுவும் ஒரு (அன்றைய வார்த்தைகளில் சொன்னால்) 'காமிக்' படம். ரோஜா முத்தையா லைப்ரரி சென்றிருந்த போது, அதைப் பற்றிய விமர்சனம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். பேப்பர் கையில் உதிர்ந்து விழும்போல, அவ்வளவு பழையதாகவும், லேசாகவும் இருந்தது:

'சபாபதி'யில் சாரங்கபாணி!



"சபாபதி டாக்கியில் ஸ்ரீ கே சாரங்கபாணி ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதராக நடிக்கிறாறென்ரறிந்து யாம் கழைபேருவகை எய்தினம். வெண்டிரைட் டண்டமிழ்ப் படத்தின் கண் இற்றைவரை நகைச்சுவை நடிப்பிற் பல் வேடம் புனைந்து மக்களைக் களிப்பூட்டுவார் சிலரேயாம்; மிகச் சிலரே யெனினும் பிழைபடா. இன்னவர்களி லின்று இயல்பே டொட்டியக்களி நடிப்பிறம்மோ டொப்பாரற்ற திறன் வாய்ந்த திரு சாரங்கபாணி என்பார், இச் 'சபாபதி,' வெண்டிரைப் படத்தினிற் றோன்றித் தண்டமிழ்ப் பண்டிதராய் நடிக்கிறாறெறுஞ் செய்தி கேட்டு உவகை யெய்தாத மாந்தரும் உளராங்கொல்! 'சபாபதி'யின்கண், சாரங்கபாணியின் ஆசிய நடிப்பினைக் கண்ணுற்ற வன்பர்களொரு கருத்தினராய்ப் புகழ்ந்த லிவண் நோக்கிற் பிற கூறுத லெற்றுக்கு ...?"

- கல்கி இதழ், டிசம்பர், 1941.

[கொடுந்தமிழைப் பார்த்து அயர்ந்துவிடாதீர்கள். படத்தில் சாரங்கபாணி ஆசிரியராக நடிக்கிறார் அல்லவா? அதான். தமிழ் ஆசிரியர் விமர்சனம் செய்வது போல் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். :) ஆனால் எழுதி முடிப்பதற்குள் கை உடைந்தே போய்விட்டது.]

அப்புறம் 'தியாக பூமி' படம். முதல் முறையாக பேபி சரோஜாவைப் பார்த்தேன். 'பாங்கிள் வாங்கலாமா?' என்று ஏதோ பாடிக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகு எல்லோருக்கும் பேபி சரோஜா பைத்தியம் பிடித்து சகலத்திற்கும் அவர் பெயரை வைத்து (ஜாப்பானிய சோப்புக்குக் கூட!), கோர்ட் வரை சென்று அதை நிறுத்தியிருக்கிறார்கள்.

'ஜெனோவோ' படத்தில் (பெயர் சரியா என்று தெரியவில்லை), எம்ஜியார் கிறிஸ்துவ மணமகனாக வந்து அசத்துகிறார். 'கைதி' என்றொரு படம் - எடுத்தவர் எஸ். பாலசந்தர். Humphrey Bogartஇன் Dark Passage படத்தின் தமிழ் ரீமேக்காம். அதற்கு முதலில் இயக்குனர் 'இரத்தம்' என்று பெயர் வைக்க, ஜூபிட்டர் பிக்சர்ஸ் அதை ரிலீஸ் செய்யும்போது 'இரத்தம் ஓடுகிறது' என்று வரவே, எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி, back அடித்துவிட்டர்கள். அப்புறம் 'கைதி' (இயக்குனருக்கு அவ்வளவாக இஷ்டமில்லையென்றாலும்) என்று பெயர் மாற்றினார்களாம்.

அன்றைய தமிழ் பற்றி ராண்டார் கை சொன்னது ஜாலியாக இருந்தது. அதிலும் 'மங்கம்மா சபதம்' படத்தில் அரச வேடம் பூண்டு வரும் ரஞ்சன், "இவா ஊதுவா, அவா வருவா," என்று பேசும் 'வசனம்' ... SmileyCentral.com

கண்ணாம்பாள் நடித்த பழைய 'கண்ணகி' படம் வேறு மாதிரி. அவர் தெலுங்கு நடிகையல்லவா? தமிழ் வசனங்களை தெலுங்கில், கரும்பலகையில் எழுதி கேமராவுக்குப் பின்னால் மாட்டியிருந்ததர்களாம். கண்ணகியாக அவர் ரௌத்ரம் பொங்க, கண்களில் ஆத்திரம் தெறிக்க, இறுதிக் காட்சியில் ஆவேச வசனம் பேசும்போது "என் பேச்சூ, என் மூச்சூ..." என்று தெலுங்கூஊ ஸ்டைலில் இழுக்க ... ரஷ் பார்க்கும்போது, "என்ன சார் இது?' என்று சிரிப்பு தாங்க முடியாமல் இயக்குனரைக் கேட்டிருக்கிறார்கள். அவர் கையைப் பிசைந்துவிட்டு, 'எப்படியோ போகட்டும்," என்றாராம். [அப்புறம் மனோகரா படத்தில் அவரது "பொறுத்தது போதும், பொங்கியெழு," வசனம் தன்னுடைய அற்புத வசனங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டதாக சிவாஜி கணேசன் ஜோக்கடிப்பாராம். இன்னொரு சுவாரஸ்யமான டிட்பிட்: 'மனோகரா' நாடகமாக நடத்தப்பட்டு வருகையில், கண்னாம்பாவின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜிதான்! Ironic, இல்லை? ]

'காதலிக்க நேரமில்லை' படத்தின் கடற்கரைப் பாட்டுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

கொட்டும் மழை நின்றிருந்தது. எனக்கு ஒரு ரோ முன்னாலமர்ந்திருந்த ஐக்காரஸ் பிரகாஷைப் பார்த்து ஹலோ சொன்னேன். [இருவரும் சினிமா ஸ்டைலில் "நீங்கதான...? என்று ஆரம்பித்தோம்.]வெளியே விற்றுக்கொண்டிருந்த 'எம் கே டி'யின் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு, ஐகாரஸ்ஸுடன் பேசிக்கொண்டே மைலாப்பூர் தெருக்களில் நடந்தேன். பழைய சென்னையின் வாசத்தில் மிதந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன்.

பி.கு: Madras University Senate House Restoration பற்றிய என் ஆங்கிலப் பதிவு இங்கே.
|

6 Comments:

  • At 6:52 PM, Blogger Jayaprakash Sampath said…

    கிட்டதட்ட எல்லாத்தியும் கவர் செஞ்சுட்டீங்க.. வெரி குட்டு..

    1. ஆர். பத்மா : இந்த அம்மணிதான், சபாபதியிலே டி.ஆர்.ஆருக்கு சோடியா நடிச்சாங்க. இவங்களை sex symbol ன்னு சொன்னா, மல்லிகா ஷெராவத் வகையறாவை என்னான்னு சொல்றது? :-)

    2. விழா முடிஞ்சு 'கை' யிடம் பேசிய போது, பேபி சரோஜா, தியாகபூமிக்குப் பிறகு இரு படங்கள் நடித்ததோடு, திரையுலகத்துக்கு டாட்டா சொல்லிட்டார் என்று சொன்னார். இப்போது எண்பத்துஅஞ்சு வயசாகிறதாம்.

    3. மங்கம்மா சபதத்திலே வரவர் பேர் ரஞ்சித் இல்லை, ரஞ்சன். டைம் கிடைக்கிறப்போ இதை படிச்சுடுங்க

     
  • At 7:26 PM, Blogger பிச்சைப்பாத்திரம் said…

    Thanks for this post.

     
  • At 10:08 PM, Blogger Pavithra Srinivasan said…

    Prakash: ரொம்ப டாங்ஸு. மல்லிகா ஷெராவத்தை விடுங்க. அந்தக் காலத்தில் தெலுங்கு 'வால்மீகி'யில் தவமணி தேவி ... இன்றைய ஷெராவத்தெல்லாம் ஒன்றுமில்லை. ஆர் பத்மாவெல்லாம் க்குட்டி பாப்பாவை fancy dress competitionஇல் ஸ்டேஜில் நிறுத்தி வைத்த மாதிரி இருக்கிறார். :)

    'ரஞ்சன்' - my mistake. வெளியே செல்லும் அவசரத்தில் டைப் அடித்துப் போட்டதன் விளைவு. சரி செய்தாச்சு. :)

    பேபி சரோஜா - என்றைக்கும் பேபிதான். இல்லை? :)

    Suresh Kannan: நன்றி.

    Nirmal: நன்றி.

     
  • At 8:56 AM, Blogger லதா said…

    Madras in Movies - அடுத்த காட்சி இருக்கிறதா ? எப்போது ?

     
  • At 8:59 AM, Blogger Pavithra Srinivasan said…

    Latha: Hi! No, there's no second Kattchi - this was the last. With Kanimozhi's session, the week's celebrations were over.

     
  • At 8:59 PM, Blogger The last adam said…

    good post...really interesting!

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home