Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, May 28, 2004

யார்? எங்கே? எப்போது?

addall.com
"...எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்,' திருமதி.ஆலிவர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

"உங்ககிட்ட ஒரு விஷயம் பகிர்ந்துக்கலாம்னு தோணுது. தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்க நல்ல மனசைப் பத்தி ரொம்ப பேர் சொல்லியிருக்காங்க," என்றார் எதிரில் இருந்த பெண்மணி.


'என்கிட்ட கடன் கேக்கப்போறாங்க,' என்ற எண்ணம் திருமதி.ஆலிவரின் மனதில் ஓடியது. 'இந்த மாதிரி எத்தனை பேரைப் பாத்தாச்சு...'

"எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும்," என்றார் திருமதி. பர்ட்டன்-காக்ஸ். "ஏன்னா...இந்தப் பொண்ணு இருக்கில்ல? சீலியா? அவளும் என் பையனும் - கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்காங்க."

"ஓ." என்றார் திருமதி. ஆலிவர், பட்டுக்கொள்ளாமல்.

"அப்படித்தான் ப்ளான். இந்த மாதிரி விஷயத்துலெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும், இல்லியா? வரப்போற பொண்ணு என்ன மாதிரி குடும்பம், அவங்க வீட்ல என்ன மாதிரி மனுஷங்கன்னு தெரிஞ்சுக்கிட்டுப் போகணும். அதான் உங்ககிட்ட கேக்கலாம்னு நெனைச்சேன். உங்களுக்கும் அவ குடும்பத்தைப் பத்தித் தெரியுமே? இதையெல்லாம் போய் வெளிய கேக்க முடியுமா? கேட்டா நல்லாத்தான் இருக்குமா? ஆனா, உங்ககிட்ட இது பத்திப் பேசறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, " பளீர்ப் புன்னகையுன் திருமதி. பர்ட்டன்-காக்ஸ் பேசினார்.

'நீங்க கேக்காமலேயே இருந்துருங்களேன்,' என்று நினைத்துக்கொண்ட திருமதி. ஆலிவர், மெதுவாக, "விஷயத்தைச் சொல்லுங்க," என்றார்.

"இல்லை...ஏன் கேக்கறேன்னா, உங்களுக்குத்தான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. கிரைம் த்ரில்லர்லாம் வேற எழுதறீங்க. இந்த பொண்னு இருக்கே...இதோட அம்மா அப்பாவைக் கொன்னாளா, இல்ல அப்பா அம்மாவைக் கொன்னாரா?"


*~*~*~*~*~*


அகதா க்ரிஸ்டியின் ஆரம்பகாலக் கதைகளில் ஓட்டம் அதிகம் இருக்கும், கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என்று எங்கேயாவது சென்றுகொண்டேயிருப்பார்கள்; க்ளூ கண்டுபிடிப்பார்கள்; கடைசியில் கொலையாளியையும் கண்டுபிடிப்பார்கள் (ஆளுக்கு ஒரு முறையாவது வில்லனிடம் மாட்டிக்கொண்ட பிறகு)[ஒரு எ.கா: 'Why Didn't They Ask Evans?']. நாவலில் அதுவரை குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை கதாப்பாத்திரங்களிலும், எவர் கொலை செய்ய வாய்ப்பே இல்லையோ, அவர்தான் அநேகமாகக் குற்றவாளியாக இருப்பார். The essence of a 'whodunit'.

க்ரிஸ்டியின் கதைகளுக்கும், மற்ற 'யார் செய்தது?' கதைகளுக்கும் வித்தியாசம் - நடை. ஆகா, என்ன நடை. எடுத்தால் கிழே வைக்க முடியாத நடை. அவரது கதாபாத்திரங்களை அவர் கையாளும் விதம். உயிருடன் எழுந்து நடமாடவிடும் திறன். கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகக் கணக்கிடும் முறை.

அடுத்தடுத்து அவர் எழுதிய நாவல்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள். ஹெர்க்யூல் பாய்ரோவும் மிஸ் மார்ப்பிளும் வந்தவுடனேயே, ஒரே இடத்தில் உட்கார்ந்து பயங்கரமாக மூளையைக் கசக்கி விடை கண்டுபிடிப்பது அதிகரித்துவிட்டது. கொலை நடந்த இடத்தில் போய் நின்றுகொண்டு தடயங்கள் கண்டுபிடிப்பது குறைந்துபோய், கொலை நடந்த போது இருந்த சூழ்நிலை, அந்தச் சமயத்தில் அங்கிருந்தவர்கள் நடந்துகொண்ட விதம், என்றோ, எங்கேயோ, நடந்த உரையாடல்கள், அவற்றுக்கும் நடந்த கொலைக்கும் சம்பந்தம்...க்ரிஸ்டீயின் கொலைகள் எவ்வளவு கற்பனை வளம் நிறைந்தவை. 'ஒருவர் மாடியிலிருந்து விழுந்தார்' என்று வைத்துக்கொள்வோம். க்ரிஸ்டீயின் உலகில், மாடியிலிருந்து கீழே விழுந்தது நுணுக்கமான உளவியல் காரணங்களால் சூழப்பட்டு ...கடைசியில், 'அடுத்த பில்டிங்குக்காரர் பூத்தொட்டியைத் தட்டிவிட்டதுதான் மரணத்திற்குக் காரணம்' என்பது போல் ஒரு - ஒரு விசித்திர முடிவில் வந்து நிற்கும். அமானுஷ்யம் நிறைந்த சம்பவமாக மாற்றப்பட்டு, 'ஆ' என்று வாயைப் பிளக்க வைக்கும்.

என்றாலும்...ஏதோ ஒரு விதத்தில் அவர் சொல்வது அத்தனையும் நம்பக்கூடியதாகவும் இருக்கும். Pshycological analysis க்ரிஸ்டீயின் கதைகள் எல்லாவற்றிலும் முக்கிய இடம் பெறும். கதைகளில் உளவியல் கோணங்களைக் கொண்டு வருவதில் அசாத்திய திறமை படைத்தவர். "ஏன், இப்படியெல்லாம் கொலை நடக்கவே நடக்காதா என்ன?" என்று அவர் கட்சி பேச வைத்துவிடும். மேலே நான் மொழிபெயர்த்திருப்பது, அவரது 'Elephants Can Remember' கதையிலிருந்து ஒரு பகுதி. முதல் அத்தியாயத்திலேயே 'தடால்' என்று எழுந்து உட்கார வைத்துவிடுவார்.

கதைப்படி, சீலியா என்ற பெண்ணின் அம்மாவும் அப்பாவும், பல வருடங்களுக்கு முன்னால் அவர்களது வீட்டினருகே இறந்து கிடக்கிறார்கள். அருகில் துப்பாக்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால்தான், அம்மாவின் சகோதரி அருகேயுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து இறந்திருக்கிறாள்.

சம்பவம் நடந்தபோது, யார் என்ன செய்தார்கள்? நடந்தது கொலையா, தற்கொலையா ? என்பது கூட யாருக்கும் புரியவில்லை. 'ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு செத்தார்கள்' என்பதுதான் எல்லோரின் ஏகோபித்த முடிவு. அதுதான் எல்லோரையும் திருப்திப்படுத்தும் முடிவும்கூட.

ஆனால், சீலியாவின் மனதில் சந்தேகம் விழுந்துவிட்டது. அவளது அம்மா கொலைகாரியா? அப்பா கொலைகாரரா? இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா? அப்படியென்றால், ஏன் செய்துகொண்டார்கள்? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டவர்கள்; அவர்களுக்குள் சண்டை வந்து யாரும் பார்த்ததில்லை. இருவருக்கும் வியாதி என்று எதுவும் இல்லை. அப்புறம் ஏன்...? தற்கொலை இல்லையென்றால், கொலையா? யார் செய்தது? எதற்காக?

ஹெர்க்யூல் பாய்ரோ - மீசையை நீவிவிட்டுக்கொண்டே, வருடக்கணக்காக புதைந்து கிடந்த உண்மைகளை தோண்டியெடுத்து வெளியில் கொண்டு வருகிறார். யார் யாரையோ கேள்வி கேட்டு, என்றோ நடந்த இரட்டைக் கொலைகளின் புதிரைக் கச்சிதமாக அவிழ்க்கிறார். நடந்தது இரட்டைத் தற்கொலை இல்லை - ஒரு கொலை, ஒரு தற்கொலை, ஒரு தண்டனை என்பதைப் புரியவைக்கிறார். [அது எப்படியென்றால்...கதையைப் படித்து நீங்களே தெரிந்துகொள்வது உத்தமம்.:-)]

க்ரிஸ்டீயின் நாவல்களை மழை நிறைந்த, சாம்பல் நிற நாட்களில் படிக்க வேண்டும். ஜன்னலின் வழியே சாரல் அடிக்க, அரை இருள் சூழ்ந்த அறையில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் அதிக சப்தமில்லாத வேளைகளில் படிக்க வேண்டும். எங்கேயாவது 'கிரீச்'சென்று கதவு திறக்கும் சப்தம் கேட்டால்கூட, திடுக்கிட்டு எழுந்து உட்காரும் சூழலாக இருக்க வேண்டும். நாவலில் இருக்கும் அமானுஷ்ய உணர்வை அப்போதுதான் முழுதும் உணர முடியும் என்பது என் கணிப்பு ['கொளுத்தும் வெயிலில் பால்கனியில் உட்கார்ந்து கொண்டுதான் படிப்பேன்' என்று நீங்கள் வீம்பு பிடித்தால், நான் பொறுப்பில்லை.]

கிரிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் போது, நல்ல புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம் தோன்றும் ஆசைதான் எப்போதும் தோன்றும்: 'இந்தக் கதை எப்படியாவது என் நினைவிலிருந்து அழிந்து விடாதா?' மீண்டும் மீண்டும் புதிதாகப் படிக்கலாமே? :-)

************
ஒரு கு: இன்று மாலை 'போகோ'வில் Harry Potter. Yahoo!


|

Tuesday, May 25, 2004

கனவு காணும் வாழ்க்கையாவும்...


கனவு என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்? நான்கு பக்கத்திற்கு மிகாமல் எழுதவும்.

(1000 மதிப்பெண். எவ்வளவு முக்கியமான கேள்வி பாருங்கள்.)

பதில்: கனவு பலவகைப்படும். என் அனுபவத்தில் அவையாவன:

1. (இரவுத்) தூக்கத்தில் கனவு காண்பது. (அருமையான Technicolourஇல் கனவுகள் வரும்.)

2. பகல் தூக்கத்தில் கனவு காண்பது . (எப்பொழுதாவது. பகல் தூக்கக் கனவுகள் நன்றாக இல்லை என்பதால் பகலில் தூங்கும் பழக்கத்தை ஒழித்துவிட்டேன்.)

3. தூங்காமல் கனவு காண்பது.( ஆ. இதுவல்லவோ கனவு? )

(தூக்கத்தில்) என் கனவுகள் விசித்திரமானவை. கனவே விசித்திரமானதுதான். நிஜ வாழ்க்கையின் விதிகள் எவற்றுக்கும் அவை கட்டுப்படாதவை. எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நிகழும். இந்த உலகில் செங்கல் கலரில் இருக்கும் நீதி மன்றம், கனவு உலகில், மழை மேகம் சூழ்ந்த மலை ஒன்றின் உச்சியில் 'தொங்கிக் கொண்டிருக்கும்'. (நான் 'கோர்ட்' வாசற்படி மிதித்த ஒரே தருணம் அதுதான் என்று நினைக்கிறேன்.). போலார் கரடியிலிருந்து, மகாபாரதக் கடோத்கஜன் வரையில் என் கனவில் வந்திருக்கிறார்கள்/றன. சில சமயம் நான் பார்வையாளியாக ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். சில சமயம் நானே என் கனவுகளில் பங்கெடுத்துக்கொள்வதுண்டு. (ஒரு பித்துப் பிடித்த பெண் என்னைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொண்ட போது நடந்தது போல.:-)எனக்கு வந்த மிகத் தத்ரூபமான கனவுகளில் அது ஒன்று. சமீபத்தில் என்ன சினிமாவைப் பார்த்து மனம் இப்ப்டி ஒரு பயங்கர சம்பவத்தை உருவாக்கியது என்று அடுத்த நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கனவில் வந்த இடம், பங்குபெற்ற ஆட்கள், அவர்கள் அணிந்திருந்த உடை...அத்தனையும் எனக்கு இப்பொழுது கூட நினைவிருக்கிறது. சம்பந்தபட்ட பெண்ணின் முகம் இப்பொழுதும் மனக்கண்ணில் தெரிகிறது. விசித்திரக் கனவுகளிலிருந்து 'சாகித்ய அகாடமி' விருது வாங்ககூடிய அளவு கற்பனை வளமுள்ள கதைகளை எழுதலாம் என்று நான் நினைத்துண்டு. மனம் எந்தக் கட்டுப்பாடும் அற்று மிதக்கும் வேளை அதுதான்.

பகல் கனவு...? அது ஒரு luxury. அந்த சுகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லைதான்.

'Harry Potter and the Sorceror's Stone' கதையில், ஒரு விசித்திரக் கண்ணடி வரும். அந்தக் கண்ணாடிக்குப் பெயர், 'The Mirror of Erised.' அந்தக் கண்ணாடியின் மேற்பாகத்தில், சில வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கும்: Erised stra ehru oyt ube cafru oyt on wohsi. (கதையைப் படித்தவர்களுக்கு இதன் அர்த்தம் உடனே புரிந்துவிடும்.)

பகல் கனவும் அந்தக் கண்ணாடியைப் போலத்தான். நம் முகத்தையும், நம் இன்றைய நிலையையும் காட்டாது. மனதின் ஆசைகளையும் ஏக்கங்களையும், 'இப்படி இருந்தால், எப்படி இருக்கும்...?' என்ற கற்பனையையும் காட்டும். அதிலேயே நிலைத்துப் பொய், இந்த் வாழ்க்கை கரைந்துபோய் அந்தரத்தில் மிதக்கும் உணர்வைத் தரும்.

எத்தனை நேரம் மிதப்பது? தரையில் இறங்கத்தான் வேண்டும்.

'கனவு காணவே கூடாது, அது பெரிய தப்பு," என்று மெஸ்ஸேஜ் சொல்லும் சிவாஜி படம் ஒன்று பார்த்திருக்கிறேன். (பெயர் நினைவில்லை.). அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் அதீதம் ஒருபக்கம் இருக்கட்டும். கனவு இல்லாத வாழ்க்கையை யாராலாவது நினைத்தாவது பார்க்க முடியுமா? கனவு காணாமல் ஒரு நாள் வாழ முடியுமா? அது ஒரு safety valve. உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் எண்ணங்களை வெளியே தூக்கியெறிய பயன்படும் அற்புத் சாதனம்.

நாணயத்திற்கு இரு பக்கம் உண்டே. கனவிலேயே நிலைத்துப்போய், இந்த உலகிற்கு வர முடியாமல் திண்டாடிப் போவதும் நடக்கும்தான். அது வேறு வகையான கொடூரம்.

இருந்தாலும்...கனவுக்கும் நனவுக்கும் இடையில் இருக்கும் அந்தக் கோடு எனக்குப் பிடித்திருக்கிறது. 'இந்த எல்லையைத் தாண்டினால் ஆபத்து' என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினால், கனவு காண்பது, ஆழமில்லாத கடல் பகுதியில் கால் நனைப்பது போலத்தான். சில சமயம், 'ஆழத்தில் என்னதான் இருக்கும்? பார்த்துவிடலாமா?' என்று தோன்றும். அதற்குமுன் சில ஆயத்தங்கள் செய்து, பயிற்சியெடுத்துக்கொள்வதும் அவசியம் என்பதும் புரிகிறது.

இப்போதைக்குக் கணுக்கால் ஆழம் போதும்.

|

Sunday, May 23, 2004

இ.ஓ.அல(பிளி)றல் - #2

[Pssst! முதல் பகுதி இங்கே.]

கதவு கையோடு வந்துவிட்டதா? அதற்கப்புறம் கொஞ்ச நேரம் அமர்க்களமாக இருந்தது. 'குய்யோ முறையோ' என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

அம்மா: என்னங்க, கதவு கையோடு வந்துடுச்சு?!

பெரியம்மா: சர்த்தான். உன் பொண்ணு கொஞ்ச நாளாவே 'Superman' பாக்க ஆரம்பிச்சா-

நான் : ஐய்யோ, ஐய்யோ! என்ன பேசறீங்க?

கைடு: அமைதி. அமைதி. எதுக்கு இவ்ளோ டென்சன்?

நான் (முணுமுணுப்பு): அதானே? இராத்திரியோட இராத்திரியா யானை உள்ள பூந்து ஒரு மிதி மிதிச்சு எல்லாரையும் சட்னியாக்கினா, என்ன டென்ஷன்?

அப்பா: என்னத்த அமைதி? என்ன காட்டேஜ் கட்டியிருக்கீங்க? ஆறரை மணியானால் யானை வந்து பிளிறும்னு டயலாக் வேற-

கைடு: ஹையோ, டயலாக் இல்லே சார். நெசமாவே...இப்ப மணி ஆயிருச்சு, வரும் பாருங்க.

நாங்கள் (மொத்தமாக): என்னது??!!

கைடு எங்களைப் பார்த்து மந்தகாசப் புன்னகை பூக்க, என்ன செய்வதென்று புரியாமல், நான் எடுத்த கதவை மீண்டும் ஜாக்கிரதையாக பொருத்தி வைத்தேன். தாழ்ப்பாளையும் போட்டு வைத்தேன்.

கைடு: இதை அப்பவே செய்திருக்கணும். சொம்மா கதவையெல்லாம் தெறந்துகிட்டு. ஜன்னலு வழியா பாத்துக்குங்க, என்ன? இனிமே கதவையெல்லாம் தெறந்துகிட்டுப் போவாதீங்க. பூச்சி பொட்டு கடிச்சிறும். இது காட்டுப் பகுதி.

பெரியம்மா: என்னது, பூச்சி பொட்டா? அட, அட. 'கதவு'ன்னு ஒண்ணு இருந்தா, அதையெல்லாம் யாராவது தெறப்பங்களா? கதவு பண்ணி வெச்சிருக்கிறதே, கையோட புடுங்கத்தான். என்ன நான் சொல்றது?

நாங்கள் ஒட்டுமொத்தமாக அவரை முறைக்க, ஜாலியாகப் பாட்டு பாடிக்கொண்டே ஜன்னலைத் திறக்கப் போய்விட்டார்.

அன்று இரவு சாப்பாட்டை அரையும் குறையுமாக முடித்துக்கொண்டு (யானை அன்று சாயங்காலம் லீவு விட்டுவிட்டது போல. அவ்வப்போது சத்தம் போட்டதோடு சரி. 'டாண்'ணென்று ஆறரைக்கு வரவில்லை. இதனால் நியாயப்படி எங்களுக்குப் பயம் குறைந்திருக்க வேண்டும், குறையவில்லை.)

இரவு மணி பத்தடித்து, தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பிக்க, பக்கத்துக் காட்டேஜிலிருந்து இன்னொரு அலறல் புறப்பட்டது.

ஆ, போச்சு. போச்சு. கடைசியில், எங்கள் எல்லோரின் பயத்தையும் கிளப்பி, ஒன்றுமறியா அப்பாவி வழிப்போக்கர்களைத் துவம்சம் செய்ய ஒரு மதம் பிடித்த யானை வந்துவிட்டது...

(இந்த இடத்தில் இன்னொரு 'தொடரும்' போட்டு எல்லோரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றி, தயக்கத்துடன் அதைக் கைவிட்டேன்.)

பதறியடித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்தோம். அப்பா கதவருகில் நின்றுகொண்டிருந்தார்.

"என்னப்பா? என்ன ஆச்சு?"

"நிலா எவ்ளோ அழகா இருக்கில்ல? வந்து பாரு."

அன்றிரவு அந்த இடத்தில் ஒரு 'மினி'-யுத்தம் நடந்திருக்க வேண்டியது...நாளும் கோளூம் குறுக்கே நின்றபடியால் (அப்பா 'சும்மா வெள்ளாட்டுக்கு...' என்று இழுத்தபடியாலும்), அது தடுக்கப்பட்டுவிட்டது.

************



விடிந்ததும் எல்லோருக்கும் ஏகமாகத் தைரியம் வந்துவிட்டதில், 'யானையாவது பூனையாவது? பார்க்கலாம் ஒரு கை,' என்று இரவு முழுவதும் பிளிறியே தூக்கத்தைக் கெடுத்த யானையைப் பார்க்கப் புறப்பட்டோம். ம்க்கும். எங்களை வெறுப்பேற்றுவதாகக் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டது போலும். பச்சைப் பசேல் என்று வனப் பகுதியை ரசிக்க முடிந்ததோடு சரி. யானை என்ன, அதன் வால் கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை.

அன்று முழுவதும் காட்டுப் பகுதியை சுற்றி பார்த்து ரசித்துவிட்டு, எங்களைச் சந்திக்காத யானைக்கும் உற்சாகப் பேர்வழியான கைடுக்கும் பிரியா விடை கொடுத்துப் புறப்பட்டோம். நாகர்ஹொளேயில் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கண்ணாமூச்சி ஆடிய யானை, தேக்கடியில் காட்சி தந்தது...அது வேறு கதை.:-)


|